விஜயன் கொலை வழக்கை 2 மாதத்தில் முடிக்க விரைவு நீதிமன்றத்திற்கு உத்தரவு
வியாழன், 23 ஜூலை 2009 (12:17 IST)
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் உறவினர் கே.விஜயன் என்ற விஜயகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கை இரண்டு மாதத்தில் முடிக்க விரைவு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் உறவினர் கே.விஜயன் என்ற விஜயகுமார் சென்னை அபிராமபுரத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று படுகொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் விஜயன் மனைவியின் சகோதரி பானு, காவலர் கருணா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் கருணாவை தவிர மற்ற அனைவரும் பிணையில் உள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட ஆர்.கார்த்திக், தினேஷ்குமார், சுரேஷ், சாலமோன் ஆகியோருக்கு, விடுமுறை கால நீதிமன்றத்தில் நிபந்தனை பிணை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இவர்கள் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனையில் மாற்றம் செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
''குற்றம்சாற்றப்பட்டவர்கள் ராமநாதபுரத்தில் தங்கி இருப்பதால் விரைவு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை பாதிக்கப்படுகிறது'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கர்ணன், 4 பேரும் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை இரண்டு மாதத்தில் ஐந்தாவது விரைவு நீதிமன்றம் முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.