முன்னாள் அமைச்சர் தம்பிதுரைக்கு சொந்தமான அதியமான் கல்வி ஆராய்ச்சி மைய நிறுவனத்திற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
அதியமான் கல்வி நிறுவனத்திற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 21 கிரவுண்ட் நிலம் ஒதுக்கப்பட்டதை தமிழக அரசு ரத்து செய்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து அந்த நிலத்தை பழைய விலையிலேயே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை கல்வி நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்தது.
ஆனால் அதனை வாரியம் நிராகரித்து வட்டியுடன் ரூ.29 லட்சம் தந்தால் நிலம் தரப்படும் என்று கல்வி நிறுவனத்திற்கு தாக்கீது அனுப்பியது.
இதனை எதிர்த்து கல்வி நிறுவனத்தின் சார்பில் தம்பிதுரை மனைவி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனுவையும் நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று நிராகரித்தது.