விதியை மீறி புதிய பாட வகுப்புகளுக்கு அனுமதி : கோவை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தாக்கீது
புதன், 3 ஜூன் 2009 (11:06 IST)
விதிமுறைகளை மீறி பல பொறியியல் கல்லூரிகளில், புதிய பாட வகுப்புகளை நடத்த அனுமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி கோவை அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் தாக்கீது அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த இந்திய மக்கள் மன்றத் தலைவர் வராகி பொதுநலன் கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவை அண்ணா பல்கலைக்கழகம் பல பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தருவதில் விதிமுறைகளை மீறி நடந்து வருகிறது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறைகளை மீறி பல பொறியியல் கல்லூரிகளுக்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.எஸ். வகுப்புகளை நடத்த அனுமதி தந்துள்ளது. இவ்வாறு அனுமதி அளித்தது விதிமுறைகளை மீறிய செயலாகும்.
மேலும் டிப்ளமோ படித்தவர்களுக்கு 3 ஆண்டு பி.டெக். வகுப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் வழிமுறை இல்லை. ஆனால் இதையும் மீறி பல பொறியியல் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.டெக். நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கி வருகிறார்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் இல்லாமல், கோவை அண்ணா பல்கலைக்கழகம் ஆன்-லைன் மூலம் பட்டப்படிப்பை தொடங்கியுள்ளது. இதற்கும் அங்கீகாரம் கிடையாது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன.
ஆகவே, பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை நிபுணர் குழுவை நியமித்து இந்த முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். விதிமுறைகளை மீதி தொடங்கப்பட்ட வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.எஸ்.ராமநாதன், என்.கிருபாகரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபற்றி பதில் தருமாறு தமிழக அரசுக்கும், கோவை அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.