ராஜிவ் பிறந்தநாளில் நல உதவிகள்: தங்கபாலு வேண்டுகோள்

புதன், 12 ஆகஸ்ட் 2009 (20:03 IST)
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 66வது பிறந்தநாள் விழாவை நல உதவிகள் வழங்கி கொண்டாடும்படி கட்சித் தொண்டர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

ராஜிவ்காந்தியின் 66வது பிறந்தநாள் வரும் 20ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தமிழகமெங்கும் அனைத்து மாவட்ட, வட்டார, நகர, கிராமக் காங்கிரஸ் மற்றும் சார்பு அமைப்புகள், அந்தந்த பகுதிகளில் தலைவர் ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

தகவல் தொடர்பு மற்றும் விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியில் வல்லரசு நாடுகளையும் விஞ்சி முன்னேற்றம் காணும் வகையில் இந்தியாவை உயர்த்திய உன்னதமான தலைவர் ராஜிவ்காந்தி. அவரது பிறந்தநாள் விழாக்கள் பொதுக்கூட்டமாகவோ, கருத்தரங்கம், திருத்தலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள், மாணவ, மாணவியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள், இரத்ததான முகாம்கள், அன்னதானம், நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்குதல் போன்ற நிழ்ச்சிகளாகவோ அமைதல் வேண்டும்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் காண்போரின் கவனத்தை ஈர்த்து அவரது சரித்திர சாதனைகளை நினைவுறுத்தும் வகையில் ராஜிவ்காந்தியின் படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்