ரயில் நாச வேலையில் ஈடுபட்டவர் ஆந்திர நக்சலைட்டா?

வெள்ளி, 1 மே 2009 (12:17 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை மின்சார ரெயிலை கடத்திச் சென்று சரக்கு ரயிலுடன் மோதச் செய்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆந்திராவைச் சேர்ந்த நக்சலைட்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை காவல் துறையினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.

ரெயில்கள் மோதலில் பலியான 4 பேரில் 3 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் 4-வது நபர் மட்டும் யார் என்று தெரியவில்லை. ரெயில்கள் மோதி சிதறிக் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலையில் நடைமேடைய்ல் முகம் சிதைந்த நிலையில் ஒருவரின் பிணம் கிடந்தது.

இந்த நபர்தான் ரயிலைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னிலையில் அந்த நபரின் பிரேத பரிசோதனை நடந்தபோது, அந்த மர்ம சாசாமி ஆந்திராவை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது

அந்த நபரின் வலது கையில் தெலுங்கு மொழியில் தோகா ராஜ் என்று பச்சைக் குத்தப்பட்டுள்ளது. எனவே இந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த நக்சலைட்டாக இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

நேற்று அந்த மர்ம மனிதனின் புகைப்படத்தைக் காட்டி சென்டட்ரல் ரெயில் நிலையத்தில் விசாரணை நடத்திய போது தொலைபேசி சாவடி வைத்திருப்பவர், இந்த குறிப்பிட்ட நபர் தினமும் இங்கு வந்து தொலைபேசியில் உரையாடுவார் என்று காவல்துறையினிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த நபர் யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்று விசாரித்ததில் திருப்பதிக்கு பேசியது மட்டும் தெரியவந்தது. ஆனால் யாரிடம், என்ன பேசினார் என்பது தெரியவில்லை.

மர்ம மனிதன் பெயர் தோகாராஜ், ஆந்திராவை சேர்ந்தவர் என்ற இந்த 2 தகவல் மட்டுமே தெரிய வந்துள்ளது.

எனவே தோகாராஜ் யார்? என்பதை கண்டுபிடிக்க சி.பி. சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம், டி.ஐ.ஜி. சேஷசாயி உத்தரவின் பேரில் சூப்பிரண்டு அருண் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஷாஜகான் தலைமையில் 3 தனிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த 3 தனிப்படையிலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு பயிற்சிப்பெற்ற காவலர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இன்று காலை ஆந்திரா புறப்பட்டுச் சென்றனர். ஒரு தனிப்படை திருப்பதி சென்றுள்ளது. மற்ற 2 படைகள் ஐதராபாத்துக்கு விரைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்