ரசாயன கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 7 பேர் பலி

செவ்வாய், 18 மார்ச் 2014 (13:29 IST)
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் ரசாயன கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
FILE

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ஏராளமான தொழிற் சாலைகள் உள்ளன. இங்கு தனியாருக்கு சொந்தமான ஒரு டெக்ஸ்டைல் சாயப்பட்டறை உள்ளது. இந்த ஆலையில் உள்ள ரசாயன கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்று காலை 11 மணியளவில் ஒரு தொழிலாளி முதலில் இறங்கினார். ஆனால் அவர் தொட்டியில் இறங்கியதும் மயங்கி விழுந்துவிட்டார்.

இதை கண்ட மேலும் 6 தொழிலாளர்கள் அடுத்தடுத்து தொட்டியில் இறங்கினர். இவர்களும் மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் அந்த 7 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்து விட்டனர்.

அந்த தொட்டியில் விஷ வாயு சூழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஷ வாயு தாக்கியதில் இந்த 7 தொழிலாளர்களும் இறந்தனர்.

விஷ வாயு தாக்கி பலியான தொழிலாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

முருகன், சுதாகர், சசிகுமார், உபசக்தி, ஜெபசக்தி, ஆனந்த் மற்றும் மதன்.

பலியான தொழிலாளர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

மேலும் இந்த விபத்தில் ஞானசேகரன், ரமேஷ், பூபதி, விஜய கருப்பன், சுரேஷ், பூபதிராஜா, போர்மல்லன் உள்பட 8 தொழிலாளர்கள் சம்பவம் நடந்த இடத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சிப்காட்டில் 7 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் பெருந்துறை மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்துக்கு பெருந்துறை மற்றும் சென்னிமலை காவல்துறையினர் விரைந்தனர்.

விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பலியானவர்களின் உறவினர்கள் பதறியடித்தப்படி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த வண்ணம் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்