மே இறுதியில் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: இந்தாண்டு 170 இடங்கள் அதிகரிப்பு
வியாழன், 1 ஏப்ரல் 2010 (10:54 IST)
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மேமாத இறுதியில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 170 இடங்கள் அதிகரிக்கப்படள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி உள்பட 15 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1745 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 262 இடங்கள் சென்றுவிடும். மீதம் உள்ள 1,483 இடங்களில் தான் தமிழக ஒதுக்கீட்டுக்கு உண்டு. 5 தனியார் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 316 இடங்கள் உள்ளன.
இவை தவிர இந்த வருடம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆகியவை புதிதாக தொடங்கப்பட உள்ளன. இந்த இரு கல்லூரிகளில் இருந்து தலா 85 இடங்கள் வர உள்ளன. அதாவது மொத்தம் 170 இடங்கள் வருகிறது. இவற்றை சேர்த்தால் அரசு ஒதுக்கீட்டில் 1,969 இடங்களில் மாணவர்கள் சேர வாய்ப்பு உள்ளது.
பிளஸ்2 தேர்வு முடிவடைந்து விடைத்தாள் திருத்தும்பணி நடைபெற்று வருகிறது. பொறியியல் சேர்க்கைக்கு முன்கூட்டியே விண்ணப்பம் வழங்கினாலும் மருத்துவ கலந்தாய்வு தான் முதலில் தொடங்கும். காரணம் எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகுதான் பொறியியல் கலந்தாய்வு தொடங்கும்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த வருடம் ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் முன்னதாக வழங்க மருத்துவக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. அதாவது மே மாத இறுதியில் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் கிடைக்கும்.
பின்னர் தரப்பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதுவும் கடந்த வருடத்தைவிட முன்னதாக தொடங்குகிறது.