முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் தொடரும்
வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (16:08 IST)
தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணம் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2011-12ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கும், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கும் உயர் கல்வி வசதி மேலும் கிடைக்கச் செய்ய மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோக்கத்தை அடையும் வகையில் குறைந்தபட்ச தகுதியாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் குறிப்பிட்டுள்ள அளவுகோலிலிருந்து மாறுபட்டு அக்குறியீடுகளைத் தளர்த்தி பின்பற்ற இந்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவ , மாணவியர்களும் கிராமப்புற மாணவ மாணவியர்களும் உயர்கல்வியைப் பெருமளவில் பெற முடியும். இத்தகைய தளர்த்தப்பட்ட குறியீடுகளைப் பின்பற்றும்படி மாண்பமை உயர் நீதிமன்றமும் இந்த மாநிலத்திற்கு ஓர் இடைக்கால ஆணை பிறப்பித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி; தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம்; விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி; நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம்; வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்; திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெம்மேலி; விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர்; திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் என பதினோறு இடங்களில் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரிகளை அந்தந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக முதலமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றை புதிதாகத் தொடங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கியுள்ளார். தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணம் இந்த அரசால் தொடர்ந்து வழங்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் இதற்காக, 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பன்னீர் செல்வம் கூறினார்.