கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளித்து, அங்கு போராடிவரும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துவரும் எஸ்.பி.உதயகுமார், நில நடுக்கம், ஆழிப்பேரலை ஆகியவற்றால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு உதயகுமார் கடந்த சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடக் கோரி இன்று 8 ஆவது நாளாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை ஆதரித்து ஒவ்வொரு நாளும் 15000 க்கும் மேற்பட்ட மக்கள் இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமத்தை சார்ந்த மீனவர்கள், விவசாயிகள், பெண்கள், பள்ளிச் சிறுவர்கள் மற்றும் தூத்துக்குடி , திருநெல்வேலி , குமரி மாவட்ட மக்களும் கலந்து கொண்டு ,இந்தப் போராட்டத்தை எழுச்சி மிக்க போராட்டமாக மாற்றி வருகிறார்கள்.
ஐந்தாவது நாள் அன்று மாலையில் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் ,எமது கோரிக்கைகளை அரசு நிராகரித்து விட்ட காரணத்தினால், மக்கள் தொடர்ந்து உண்ணாநிலையை தொடர வேண்டும் என்றும் அறுதியிட்டு முடிவெடுத்த காரணத்தினால் இன்றும் 7 ஆவது நாளாக தொடர்ந்து போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், நேற்றைய 16.09.2011 இந்து நாளிதழில், அணு சக்தி வளாக இயக்குனர் , தமிழக மின்துறை அமைச்சர் திரு. நத்தம் சீனிவாசன் மற்றும் தமிழக முதல்வர் அவர்கள் அனைவரின் கருத்துகள், அறிக்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் சில பேர் மட்டுமே நடத்தி வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இது சில பேர் நடத்தும் போராட்டம் அல்ல , இது மக்களின் தன்னெழுச்சியான போராட்டம். கடந்த 7 நாட்களாக இடிந்தகரை கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எந்த தூண்டுதலும், எந்த நிதி உதவியும் இல்லாமல், தாங்களாகவே கிளர்ந்து எழுந்து, தங்களது வேலைகளை துறந்து, பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், பட்டினி இருந்து தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இது சிலர் செலவழித்து நடத்தும் போராட்டம் அல்ல என்பதை உலகமே அறியும். உங்களின் மத்திய ,மாநில அரசுகளின் உளவுத் துறையும் அறியும்.
இது மீனவர்கள் நடத்தும் போராட்டம் என்று சுருக்கிச் சொல்லுவது உண்மையை திருத்திக் கூறுவது ஆகும். ஏனெனில், பல விவசாய கிராமங்கள் இந்தப் போராட்டத்திற்கு நிதி உதவியும் செய்து வருகிறார்கள். நேற்றைய தினம் வைராவிக் கிணறு கிராமம் சார்பாக 30,000 ரூபாய் நன்கொடை வழங்கினார்கள் . இன்று சிறு தங்க நாடார் குடியிருப்பு சார்பாக ரூபாய் 10,000 நன்கொடை வழங்கபட்டது. இந்த செயல்பாடுகளை மீனவர்கள் நடத்தும் போராட்டம் என்று முதல்வர் எப்படி குறிப்பிட முடியும்? இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் பல நகரங்களில் இருந்தும் பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், சுற்றுச் சூழல் அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள் ,பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாய அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கலந்து கொண்டு இதை தமிழக மக்களின் ஒட்டு மொத்த உயிர் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனை என்று கருதி ஒரே குரலில், ஒற்றைக் கோரிக்கையோடு போராடி வருகிறார்கள்.
FILE
இந்தப் போராட்டத்தை முன்னாள் ஆளும் கட்சி தூண்டி விடுவது போல அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் சொல்லி இருப்பது மிகவும் தவறு. எந்த சக்தியும் இந்தப் போராட்டத்தின் பின்னால் இல்லை என்பதை நாங்கள் உறுதியாக அறிவிக்கிறோம். மக்கள் சக்தி, மக்களின் ஈகை மட்டுமே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
இந்த அணு உலை பாதுகாப்பான அணு உலை என்றும், இதற்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டிருக்கிறது, எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள் . ஆனால், காசிநாத் பாலாஜி அவர்களோ தனது பேட்டியில், இந்த அணு உலையை சுற்றி ஐந்து அடுக்குப் பாதுகாப்பு அமைக்கபட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த இரண்டு அறிக்கைகளில், நாங்கள் எதை நம்புவது? முதல்வர் சொல்வதையா? அறிவியலாளர் சொல்லுவதையா?
அணு உலையை ஆழிப்பேரலை மற்றும் இயற்கைப் பேரிடர் ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற ஆலையை கடல் மட்டத்தில் இருந்து 7.5 மீட்டர் உயரத்தில் கட்டியிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அணு உலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போது, 7.5 மீட்டர் உயரம் என்பது இயற்கைப் பேரிடர்களில் இருந்து எப்படி அணு உலையைக் காப்பாற்ற முடியும்?
அணு உலை அமைந்து இருக்கும் இடம் மிகவும் பாதுகாப்பான பகுதி என்று தாங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள் .நிலநடுக்கம் குறித்து நாங்கள் “சில” புள்ளி விவரங்களைத் தர விரும்புகிறோம். 2003 பிப்ரவதி 9ஆம் தேதி பாளையங்கோட்டையிலும் 2006ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி கூடங்குளத்தை சுற்றியுள்ள அஞ்சுகிராமம், சாமித்தோப்பு, அழகப்பபுரம் போன்ற பல்வேறு கிராமங்களிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 7 மாவட்டங்களிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல. உலகத்தில் இன்று பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அமெரிக்காவின் வாஷிங்டன், பென்டகன், கனடாவின் வான்கூவர் போன்ற மிகவும் முக்கியமான நகரங்கள் கூட இன்று பாதுகாப்பானதாக நகரங்கள் இல்லை என்ற நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
திட்டங்களுக்காக மக்கள் இல்லை , மக்களுக்காக திட்டங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது ஏழை , எளிய , சாமானிய மக்களுக்கான அரசு என்றால், இந்த ஆபத்தான திட்டம் மக்களின் உயிருக்கு, வாழ்வாதாரத்திற்கு எதிராக இருப்பதாக ஒட்டு மொத்த தமிழர்களும் கருதுவதால், தமிழக மக்களின் அமோக ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்திருக்கும் தாங்கள், மக்களின் உண்மையான உணர்வுகளை புரிந்து கொண்டு, இந்த ஆபத்தான அணு உலைகளை திறக்காமல், இவற்றை நிரந்தமாக மூடிட வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக மக்கள் அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கி, தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றத் திட்டமிட்டிருக்கும் தங்களின் மேலான திட்டங்களுக்கு நாங்கள் ஒரு போதும் தடங்கலாக இருக்க மாட்டோம் . தங்களின் மரபு சாரா எரி சக்திக் கொள்கையை நாங்கள் மனமாரப் பாராட்டுகிறோம். இத்தகைய திட்டங்களால் தமிழர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள். இத்தகைய உலக மக்களுக்கு , இயற்கைக்கு எதிரான திட்டங்களை தமிழகத்தில் ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.