மானாமதுரை என்கவுன்டர் வழக்கு- தமிழக அரசுக்கு நோட்டீஸ்
புதன், 12 டிசம்பர் 2012 (14:38 IST)
FILE
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை துணை ஆய்வாளர் ஆல்பின் சுதன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபு, பாரதி ஆகியோர் கடந்த நவம்பர் 30ஆம் தேதி என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 6 ஆண்டுகளில் 32 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி என்கவுன்டரில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், ஆனால் எந்த அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு மாறாக என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குகள் மூடப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
எனவே, டி.எஸ்.பி வெள்ளதுரை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், என்கவுன்டர் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் புகழேந்தி கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.