விழுப்புரம் மாவட்டம் பூந்துரை கிராமத்தில் செம்மண் குவாரியில், அரசு அனுமதித்த 10 அடிக்கு பதிலாக 40 அடி ஆழத்துக்கு செம்மண் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் வானூர் தாசில்தார் போலீசில் புகார் செய்தார்.
இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்பட 6 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த புகாரில் தாசில்தார் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பொன்முடி, கவுதம சிகாமணி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்ய முயன்றி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து பொன்முடி உள்பட 6 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் குமார் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்கப்பட்டதால் மனு மீதான விசாரணையை வரும் 4ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.