மகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவரை வெட்டிக் கொன்ற தந்தை

திங்கள், 10 பிப்ரவரி 2014 (13:14 IST)
FILE
தேனி அருகே மகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவரை தந்தை சரமாரியாக வெட்டிக் கொன்றார்.

தேனி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் ராஜவீதியை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் தர்மேந்திரன் (வயது30). விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தர்மேந்திரன் தனது தாயார் ராமுத்தாய் என்பவருடன் வசித்து வந்தார். இவருடைய வீட்டின் மாடியில் அக்காள் முத்துலட்சுமி தனது மகளுடன் வசித்து வந்தார். முத்துலட்சுமியின் கணவர் மதனகோபால் (40). இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

இதற்கிடையே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த தர்மேந்திரன் தனது அக்காள் முத்துலட்சுமியின் மகளிடம் அடிக்கடி செக்ஸ் சில்மிஷம் செய்து வந்தார். இது குறித்து முத்துலட்சுமி வெளியூரில் இருந்து ஊர்திரும்பிய தனது கணவர் மதனகோபாலிடம் கூறினார்.

ஆத்திரம் அடைந்த அவர் நேற்று அதிகாலை தர்மேந்திரனின் வீட்டிற்கு சென்றார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த தர்மேந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

வெட்டு காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தர்மேந்திரனின் தாய் ராமுத்தாய் போடி தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிலிப் கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தர்மேந்திரனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தலைமறைவான மதனகோபாலை தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மேந்திரன் மீது ஏற்கனவே அரிவாளால் வெட்டிய வழக்கு உள்ளது. அதனால் சிறைக்கு சென்று சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் அவர் வெளி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாமீனில் வெளிவந்த கைதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்