பொங்கலுக்கு 8,116 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - ஜெயலலிதா அறிவிப்பு
வியாழன், 12 ஜனவரி 2012 (15:14 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 8,116 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் பொலிவுடன் கொண்டாட தங்கள் பிறந்த ஊருக்கு எவ்வித சிரமமுமின்றி சென்று திரும்பும் வகையில், பொங்கல் திருநாளை ஒட்டி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, 12 ஆம் தேதி அன்று 1,115 பேருந்துகளும், 13 ஆம் தேதி அன்று 1,965 பேருந்துகளும், 14ஆம் தேதி அன்று 1,965 பேருந்துகளும் மற்றும் 15 ஆம் தேதியன்று பயணிகளின் தேவைக்கேற்ப உரிய எண்ணிக்கையிலும் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படும்.
இதில், அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இம்மாதம் 12ஆம் தேதி அன்று 557 பேருந்துகளும், 13 ஆம் தேதி அன்று 1,257 பேருந்துகளும் மற்றும் 14 ஆம் தேதி அன்று 1,257 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், ஊர் திரும்பிடும் பொது மக்களின் நலன் கருதி இதே அளவிலான பேருந்துகள் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இயக்கப்படும். சிறப்புப் பேருந்துகளுக்கு, உடனடி இணையதள வழி பதிவு திட்டத்தின் கீழ் பயணச்சீட்டு முன்பதிவு செய்திடும் வசதி செய்யப்படும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.