வழக்கறிஞர் - போலீசாரிடையே ஏற்பட்ட மோதலின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி, போலீஸார் நடத்திய தடியடியில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டது.
சிதம்பரம் கோயில் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றத்திற்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீது முட்டை வீசப்பட்டது. இதுதொடர்பாக, 15 வழக்கறிஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது இந்த மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு, சிபிஐ விசாரணக்கு மாற்றப்பட்டு தற்போது நிலுவையில் உள்ளது.
வழக்கறிஞர் - போலீசாரிடையே ஏற்பட்ட மோதலின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்றத்தை புறக்கணித்தனர். இதனையொட்டி, வழக்குரைஞர்கள் இன்று, நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலமாகச் சென்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது. இதுபோல், தமிழகத்தின் பல இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.