மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சேருவதற்காக போலி நியமன உத்தரவுடன் வந்த பஞ்சாபை சேர்ந்த 11 பேர் உள்பட 14 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலை வாங்கித் தரும் புரோக்கர்களாக செயல்பட்டு வரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பர்விந்தர்சிங் (33), தர்மேஷ்குமார் (34), சுல்கான்சிங் (52) ஆகியோர் மத்திய அரசில் சமையல் வேலை, செருப்பு தைப்பவர், முடி வெட்டுபவர் உள்பட பல்வேறு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளனர்.
இந்த புரோக்கர்களிடம் ஏமாந்தவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சர்னைல்சிங், ரஞ்சித்சிங், கே.லக்விந்தர்சிங் உள்பட 11 வாலிபர்கள். வேலை வாங்கித்தருவதாக ஒவ்வொருவரிடமும் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.22 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர் புரோக்கர்கள். 11 பேரும் தங்கள் ஓரிஜினல் படிப்பு சான்றிதழ்களை கொடுத்துள்ளனர்.
போலியான பணி நியமன உத்தரவுகளை கொடுத்த புரோக்கர்கள், உங்களுக்கு தமிழ்நாட்டில் அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் வேலை வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
11 வாலிபர்களையும் 10ஆம் தேதி அரக்கோணம் அழைத்து வந்த 3 புரோக்கர்கள் அங்குள்ள லாட்ஜியில் தங்கியுள்ளனர். அன்று 4 மணியளவில் நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளிக்கு சென்று 3 புரோக்கர்களும் விசாரித்து விட்டு சென்றுள்ளனர்.
11 வாலிபர்களையும் நேற்று மத்திய தொழில் பாதுகாப்பு பயிற்சி பள்ளிக்கு அழைத்து வந்துள்ளனர் புரோக்கர்கள். அப்போது, மத்திய தொழில் பாதுகாப்பு பயிற்சி பள்ளி டி.ஐ.ஜி. சுரேஷ்குமார் அவர்களிடம் இருந்த சான்றிதழ், பணி நியமன உத்தரவு ஆகியவற்றை வாங்கிப் பார்த்துள்ளார்.
அதில் இருந்த சான்றிதழ்கள் அனைத்தும் ஒரிஜினல்கள். ஆனால் பணி நியமன உத்தரவு மட்டும் போலியானது என்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து 14 பேரையும் போலீஸார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.