பெண்களை கற்பழித்த காவலர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
புதன், 4 ஜனவரி 2012 (15:57 IST)
இருளர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 5 காவலர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த நவம்பர் 22 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள மண்டபம் கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகா மாதேஸ்வரி ஆகிய நான்கு பெண்களை, காவல்துறையினர் விசாரணைக்கு என்று கூறி, வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாற்றப்பட்ட 5 காவலர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சட்டத்திற்கு புறம்பாக பெண்களை காவலில் வைத்தது தவறு என அரசே ஒப்புக் கொண்ட பின்னரும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது சரியல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், குற்றம்சாற்றப்பட்ட காவலர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதி அளித்தார். மேலும் போலீஸ் மீதான விசாரணையை முடிக்க அரசு தரப்பில் 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.