பெட்ரோல், டீசல் மீது வரி குறைப்பில்லை: கருணாநிதி
வியாழன், 1 ஜூலை 2010 (11:44 IST)
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீது மாநில அரசால் விதிக்கப்படும் வரியை குறைப்பதற்கில்லை. வரியைக் குறைத்தால் மாநில அரசின் நிதி நிலைமை மிகவும் பாதிக்கும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், ஆந்திரத்தில் பெட்ரோலியப் பொருள்களின் மீது மாநில அரசால் விதிக்கப்படும் வரி விகிதத்தைக் குறைக்கப் போவதாக அந்த மாநில அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
அதுபற்றி அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப் போவதாக ஆந்திர முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆந்திரம் இப்போது யோசித்துக் கொண்டிருக்கும் முடிவை தமிழக அரசு, 2006ஆம் ஆண்டிலேயே செயல்படுத்தியது. மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்திய போது, தமிழகத்தில் டீசலின் மீதான விற்பனை வரி 25 சதவீதத்திலிருந்து 23.43 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
அதுபோலவே, 2008ஆம் ஆண்டு மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது தமிழக அரசு 23.43 சதவீதத்தில் இருந்து 21.43 சதவீதமாகக் குறைத்துக் கொண்டது. அப்போது வேறு எந்த மாநிலமும் தங்கள் மாநிலத்துக்குக் கிடைக்கும் வரியைக் குறைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
அதுமாத்திரமல்ல; இப்போது மாநிலங்களுக்குள்ள வருவாய் ஆதாரங்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில் இதை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே சென்றால் அது மாநில அரசுகளின் நிதி நிலைமையை மிகவும் பாதிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மாநில அரசுகள் தங்கள் வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லும் போது - இப்போது பெட்ரோலிய விலை உயர்வுக்காக போராட்டம் நடத்தப் போகின்ற பா.ஜ.க, இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களிலே எந்த அளவுக்கு அவர்கள் தாங்கள் வசூலிக்கும் வரியைக் குறைத்துக் கொண்டார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆந்திரத்தில் பெட்ரோலுக்கு 33 சதவீதமும், டீசலுக்கு 22.25 சதவீதமும் அந்த மாநில அரசு வரி விதிக்கிறது. கர்நாடகத்தில் பெட்ரோலுக்கு நுழைவு வரி உட்பட 30 சதவீதமும், டீசலுக்கு 23 சதவீதமும் உள்ளது. கேரளத்தில் செஸ் உட்பட பெட்ரோலுக்கு 30 சதவீதமும், டீசலுக்கு 25.69 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. பஞ்சாபில் கூடுதல் வரியோடு சேர்த்து பெட்ரோலுக்கு 37.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
டீசலுக்கு மகாராஷ்டிரத்தில் 23 சதவீதமும், மத்தியப் பிரதேசத்தில் நுழைவு வரியோடு சேர்த்து 24 சதவீதமும், சட்டீஸ்கர் மாநிலத்தில் 25 சதவீதமும் அந்தந்த மாநில அரசுகளால் வரி வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பெட்ரோலுக்கு 30 சதவீதம் வரியும், டீசலுக்கு 21.43 சதவீதம் வரியும் இப்போது உள்ளது. எனவே, இந்தியாவில் தமிழகத்திலேதான் அதிக வரி வசூலிக்கப்படுவதாகச் சொல்லப்படுவது சரியான தகவல் அல்ல என்பது எல்லோருக்கும் விளங்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.