பூஜ்ஜியத்தில் ஒரு ராஜ்ஜியம் - ஜெ. குறித்து கருணாநிதி கருத்து

சனி, 24 மார்ச் 2012 (20:35 IST)
இல்லாத நிதியில் ஏராளமான திட்டங்களை விளம்பர இன்பத்துக்காக முதல்வர் வெளியிடுகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் 26 ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்; இன்றையதினம் முதலமைச்சர் காவல் துறையை அதிநவீனமயமாக்குவது, ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகள், புதியதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்கவும் முதலமைச்சர் உத்தர விட்டதாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது.

இவ்வாறு அரசின் அறிவிப்புகளையெல்லாம் முதலமைச்சர் செய்வது முறை தானா? ஒருவேளை நிதி நிலை அறிக்கையிலே இந்த அறிவிப்புகளையெல்லாம் சேர்த்தால் அதனை நிதியமைச்சர்தான் படித்தறிவிக்க வேண்டும்;

முதலமைச்சர் அம்மா உத்தரவு என்று ஏடுகளிலே வராது என்பதால் இவ்வாறு அறிவிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை என்று கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மேலும், பத்தாண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் - 25 லட்சம் வீடுகள் - 2 கோடி பேருக்கு மனித வளப் பயிற்சி - 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு உள்ளிட்ட முதலமைச்சரின் கனவு திட்டம் வெறும் கனவுதான் என்று குறிப்பிட்டுள்ள கருணாநிதி, இல்லாத நிதியில் ஏராளமான திட்டங்கள்; பூஜ்ஜியத்திலே ஒரு ராஜ்ஜியம்! எல்லாம் விளம்பர இன்பம் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்