புதுமுக நடிகர் கொலை: பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன

Ilavarasan

திங்கள், 12 மே 2014 (16:34 IST)
நடிகர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ கொலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
 
அதன் விபரம் வருமாறு:–
 
நெல்லை பரப்பாடியை சேர்ந்த நடிகர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ மனைவி மற்றும் 2 குழந்தைகளை பிரிந்து சென்னை மதுரவாயலில் தங்கி இருந்தார். அப்போது அவர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பல லட்சம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தை சினிமாவில் வட்டிக்கு விட்டும் ஏராளமாக சம்பாதித்துள்ளார்.
 
இதனால் கொலையான ரொனால்டு பீட்டர் பிரின்சோவுக்கு பல துணை நடிகைகள் உள்பட ஏராளமான விபசார அழகிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பல பெண்களை தனது வீட்டுக்கு அழைத்து சென்று சில மாதங்கள் உல்லாசமாக இருந்து விட்டு அந்த பெண்களுக்கு பணம் கொடுத்து அனுப்பி விடுவாராம்.
 
இது போலத்தான் நடிகை சுருதி சந்திரலேகாவையும், தான் வசிய வலையில் வீழ்த்தி மதுரவாயல் வீட்டில் தனி குடித்தனம் நடத்தி உள்ளார். சில மாதங்களில் அவருக்கு சுருதி சந்திரலேகா மோகம் தீர்ந்து விட்டது. இதனால் அவருக்கும் பணம் கொடுத்து செட்டில் செய்ய பேசி வந்துள்ளார். இது நடிகை சுருதி சந்திரலேகாவுக்கு பிடிக்கவில்லை. அவர் பீட்டர் பிரின்சோவை விட்டு போக மறுத்துள்ளார். இதனால் பீட்டர் பிரின்சோ, நடிகை சுருதி சந்திரலேகா வீட்டில் இருக்கும் போதே பல இளம்பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த சுருதி சந்திரலேகா பீட்டர் பிரின்சோவை கொலை செய்து அவரது பணத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். அப்போது தான், பீட்டர் பிரின்சோவின் நண்பரான நெல்லை உமா சந்திரன், தனக்கு ஆன் லைன் வர்த்தகத்தில் போதிய பங்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டார் என்று நடிகை சுருதி சந்திரலேகாவுடன் கூட்டு சேர்ந்து, பீட்டர் பிரின்சோவை கொலை செய்து மொத்த பணத்தையும் தங்களுக்குள் பங்கு போட முடிவு செய்தனர்.
 
அதன்படி பீட்டர் பிரின்சோவை கொலை செய்து, அவரது நகை–பணத்தை அபகரித்தனர். இதில் 1 பங்கு பணத்தை நடிகை சுருதி சந்திரலேகாவுக்கு கொடுத்து அனுப்பி விட்டனர்.
 
மேலும் கொலையான பீட்டர் பிரின்சோ, சினிமா உலகில் யார் யாருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார் என்ற விபரம் அனைத்தும் அவரது கார் டிரைவரான பெருமாள்புரத்தை சேர்ந்த ஜான் பிரின்சனுக்கு தெரியுமாம். இதனால் அவரையும் கூட்டாக சேர்த்து அவர் வட்டிக்கு விட்ட பணத்தை இவர்கள் வசூல் செய்து ஜாலியாக செலவு செய்துள்ளனர்.
 
நடிகர் ரொனால்டு பீட்டர் பிரின்சோவை கொலை செய்து புதைத்தது யாருக்கும் தெரியாது. இப்படியே தப்பி விடலாம் என்று திட்டம் போட்டுள்ளனர்.
 
ஆனால் தற்போது இவர்கள் காவல்துறையினரிடம் வசமாக சிக்கி கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்