பிள்ளைகள் காதலால் தந்தையர்களிடையே அடிதடி!

வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (17:06 IST)
FILE
அடுத்தாத்து ஆல்பர்ட் என்ற திரைப்படத்தில் வருவது போல், மரோசரித்ராவில் வருவதுபோல் அடுத்தடுத்த வீட்டு இளம் சிட்டுக்கள் காதலில் விழ, காதலர்களின் தந்தை தெருவில் சண்டை போட்ட சம்பவம் நெகமம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெகமம் சின்னக்கம்பலாம்பட்டியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் (வயது40) மற்றும் முருகன் (45). இவர்கள் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.

கிருஷ்ணனின் மகள் சந்தியாவுக்கும் (18) முருகனின் மகன் தமிழ்மணி (21) ஆகியோருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

எதிர்ப்பையும் மீறி காதல் ஜோடி கடந்த 6 மாதத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்த பெற்றோர்கள் காதல் ஜோடியை தேடி கண்டுபிடித்து பிரித்து தங்களுடன் அழைத்து வந்தனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.

நேற்று தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க கிருஷ்ணனும், முருகனும் சென்றனர். அப்போது அவர்களுக்குள் தண்ணீர் பிடிப்பதில் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்விரோதம் தலை தூக்கியது. இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை விலக்கி விட்டனர்.

காயம் அடைந்த கிருஷ்ணன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முருகன் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நெகமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்