பார்வதியம்மாளுக்கு சிகிச்சை கோரிய வழக்கில் இருந்து தமிழக அரசு விடுவிப்பு
புதன், 28 ஏப்ரல் 2010 (16:08 IST)
பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதில் தமிழக அரசுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தையடுத்து இந்த வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பார்வதியம்மாளை மலேசியாவில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஜெயசிங் ஆஜராகி வாதாடுகையில், இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள்.
பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. அயல்நாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது என்றார்.
இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.
பின்னர் நடந்த விவாதத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன், நாளை பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளை பிற்பகலுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.