பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைப்பதன் மூலம் மாநிலங்களின் உரிமையைப் பறிக்க வேண்டாம் என மத்திய அரசை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித உயிர்களுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக திகழும் பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் இதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் இருக்கக்கூடாது.
இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளின் அடுத்தக் கட்டமாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்றும், வரும் ஒன்றாம் தேதி முதல் இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள ஆணையின்படி பயங்கரவாத தடுப்பு மையத்தை நிர்வகிக்கும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், யாரை வேண்டுமானலும் கைது செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒருவரை கைது செய்வதற்காக மாநில உள்துறை செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் இந்த ஆணையின் மூலம் பறிக்கப்பட்டு மத்திய உள்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்திய அரசியல் சட்டத்தின்படி, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது.
இப்படியொரு சட்டத்தை பிறப்பித்திருப்பதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை விட, மிகப்பெரிய தாக்குதலை மத்திய அரசு நடத்தியுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. கல்வி, நிதி என பொதுப் பட்டியலில் உள்ள அனைத்து துறைகளிலும் மத்திய அரசு விருப்பம்போல திருத்தங்களை கொண்டு வந்து மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து வருகிறது.
உரிமைகளை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, மாநிலங்களின் உரிமையை பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள ஆணையை திரும்ப பெற வேண்டும். அதற்கு பதிலாக மாநில அரசுகளுடன் கலந்துபேசி அவற்றின் பங்கேற்புடன் கூடிய புதிய அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும்.