பனையூர் இரட்டைக் கொலை விவகாரம்: காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் இறந்தது தொடர்பாக வழக்குப் பதிவு
செவ்வாய், 8 செப்டம்பர் 2009 (09:35 IST)
பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சண்முகசுந்தரம் காவலர்கள் விசாரணையில் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை நீலாங்கரையை அடுத்த பனையூரை சேர்ந்த ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் இளங்கோவனும், அவரது மனைவி ரமணியும் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
துப்பாக்கியால் சுட்ட சண்முகராஜனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் காவலர்கள் விசாரணையின் போது அவர் மர்மமான முறையில் இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், சண்முகராஜனின் மரணத்தை கொலை வழக்காக விசாரிக்க வேண்டுமென்று வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி எம்.ஜெய்சந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சண்முகராஜன் மரணம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா தெரிவித்தார். வழக்கு விசாரணையை வருகிற 15ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
அதற்குள் முதல் தகவல் அறிக்கை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.