பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும், இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்காக, குடியரசு நாளன்று மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டு பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ என 3 நிலைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
2010ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான தகுதியாளர்களைத் தேர்வு செய்வதற்கான விவரக் குறிப்புகள் உரிய படிவத்தில் கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009 அவர்களுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை mha.nic.in, www.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கென அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யபடுவர் என்று கூறப்பட்டுள்ளது.