பத்திரப்பதிவு சட்டத்தை திருத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
வியாழன், 17 செப்டம்பர் 2009 (10:52 IST)
நீதிமன்றம் ஏலம்விடும் சொத்துக்களுக்கும், முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கும் வகையில் பத்திரப்பதிவு சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்றம் மூலம் ஏலம் விடப்பட்ட 59 ஏக்கர் நிலத்தை ரூ.1 கோடியே 73 லட்சத்துக்கு விஜயலட்சுமி அறக்கட்டளை எடுத்தது.
நீதிமன்ற அனுமதியின் பேரில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பத்திரப்பதிவு அதிகாரி ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்துக்கு முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தாக்கீது அனுப்பினார்.
இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து, பத்திரப்பதிவு சட்டம் 17(2) மற்றும் 89-வது பிரிவின்கீழ் நீதிமன்றங்கள் ஏலம்விடும் சொத்துக்களுக்கு பத்திரப்பதிவு கட்டணம் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினார்.
1908இல் பத்திரப்பதிவு சட்டம் உருவாக்கப்பட்டது என்றும், 'ஆமை புகுந்த வீடு, அமீனா வந்த சொத்தும் விளங்காது' என்று மக்கள் கருதியதால் முன்பு நீதிமன்றம் சொத்துக்களை அதிகளவில் ஏலம் எடுக்க முன்வருவதில்லை என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டதால், நீதிமன்றம் ஏலம்விடும் சொத்துக்களுக்கும், முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கும் வகையில் பத்திரப்பதிவு சட்டத்தை மத்திய-மாநில அரசுகள் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.