நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளை!

சனி, 29 ஜூன் 2013 (10:00 IST)
FILE
நெல்லையிலிருந்து சென்னை வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலவிதமான அயல்நாட்டு கரன்சிகளுடன் வந்த பிரேம் நசீர் என்ற நபர் வைத்திருந்த ரூ.63 லட்சம் மதிப்புள்ள பணம் கொள்ளை போனது.

திருநெல்வேலியில் மணி எக்ஸ்சேஞ்ச் என்ற வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றித்தரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் பிரேம் நசீர்.

இவர் ஒவ்வொரு மாத இறுதியிலும் தங்களிடம் வந்த வெளிநாட்டு பணத்தை சென்னைக்கு கொண்டு வந்து இங்குள்ள அலுவலகம் மூலம் மும்பைக்கு அனுப்புவது வழக்கம்.

அவர் ஒரு சூட்கேசில் துணிமணிகளும், மற்றொரு சூட்கேசில் அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், யூரோ உள்பட 10 வெளிநாட்டு பணத்தை வைத்திருந்தார்.

அந்த வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.63 லட்சம் ஆகும். தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த அவர் செங்கல்பட்டு அருகே வந்தபோது தனது பெட்டியை பார்த்தார். அப்போது வெளிநாட்டு பணம் வைத்திருந்த பெட்டியை மட்டும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரெயிலில் பல இடங்களில் தேடினார். ஆனால் அந்த பெட்டி கிடைக்கவில்லை. அதற்குள் ரெயில் எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் பிரேம்நசீர் எழும்பூர் ரெயில் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தாம்பரம் ரெயில்வே போலீசில் புகார் செய்யும்படி கூறினார்கள்.

அதன்படி அவர் தாம்பரம் ரெயில்வே போலீசில் இதுபற்றி புகார் கொடுத்தார். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்