முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து அ.தி.மு.க எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு முல்லை பெரியாறு அணையை உடைத்து அந்த பகுதியில் புதிய அணையை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேரள மாநில எம்.பி.க்கள் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க எம்.பி.க்கள் தம்பிதுரை தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நா.பாலகங்கா, டாக்டர் மைத்திரேயன், ரபிபெர்னார்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய தம்பிதுரை, முல்லைப் பெரியாறு அணை மிக வலுவாக உள்ள நிலையில், கேரள அரசாங்கம் இந்த பிரச்சனையை அரசியலாக்கி ஆதாயம் தேட முயல்கிறது. கேரள எம்.பி.க்களும் அணை வலுவிழந்து இருப்பதாக தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் எழுதிய கடிதத்தின அடிப்படையில் மத்திய அரசு செயல்பட வேண்டும். கேரள மாநிலம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்திட வேண்டும் என்றார்.