நடிகர் கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' படத்திற்கு தடை விதிக்கக் கோரி பிரமிட் சாய் மீரா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க கோரி நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பிரமிட் சாய்மீரா பட நிறுவனத்தின் தலைவர் நாராயணன் சார்பில் அவரது வழக்கறிஞர் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''பிரமிட் சாய்மீரா நிறுவனம் மற்றும் ராஜ்கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து 'மர்மயோகி' என்னும் திரைப்படத்தை தயாரிக்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ரூ.100 கோடி செலவில் இந்த படம் தயாரிக்கப்பட திட்டமிடப்பட்டது. இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார்.
மேலும் இந்த படத்தை முடித்து கொடுத்த பிறகே மற்ற படங்களில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்த படத்தில் அமிதாபச்சன், ஹேமமாலினி உள்ளிட்டவர்களை நடிக்க வைப்பதாகவும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான முன்பணம் என்றும் ரூ.7 கோடியே 80 லட்சத்தை அவர் பெற்று கொண்டார். ஆனால் திட்டமிட்டபடி 'மர்மயோகி' படம் எடுக்கப்படவில்லை.
இதனிடையே கமல்ஹாசன், ராஜ்கமல் நிறுவனம் சார்பில் 'உன்னைப்போல் ஒருவன்' என்னும் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தை வெளியிட அனுமதித்தால் எங்கள் நிறுவனத்திற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். எனவே நாங்கள் கொடுத்த முன்பணத்தை வட்டியோடு திருப்பித்தரும் வரை அந்த படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 16 தள்ளிவைத்தார். அதுவரை பழைய நிலையே நீடிக்கும் என தெரிவித்தார்.