நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் 7 தீர்மானங்கள்

செவ்வாய், 2 ஏப்ரல் 2013 (17:38 IST)
FILE
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வாசித்தார்.

தீர்.1 இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பான மறுவாழ்வு கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தீர்.2 இலங்கையில் நடைபெற்ற போரின் போது ஈழத்தமிழ் மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தீர்.3 இலங்கை தன் போக்குகளை மாற்றிக் கொள்கின்ற வரை இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

தீர்.4 இதுவரை தமிழக மீனவர்கள் 578 பேர் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் தாக்குதலுக்கும், பொருளாதார இழப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர். தமிழக மீனவர்கள் அல்ல, இந்திய மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும்.

தீர்.5 ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக தமிழக சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி.

தீர்.6 தமிழக அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஒட்டுமொத்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்.7 தமிழக இளைஞர்களும், மாணவர்களும் இலட்சியத்துக்காக தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தீக்குளிப்பு போன்ற தற்கொலை முறைகளைக் கைவிட வேண்டும். ஆகிய 7 தீர்மானங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இயற்றப்பட்டது.

நடிகர் சங்கத்தின் உண்ணாவிரத்தை தமிழகத்தில் முதன்முதலில் மாணவர் போராட்டத்தைத் துவங்கிய லயோலா கல்லூரி மாணவர் ஜோ.பிரிட்டோ மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் தனசேகர் ஆகியோர் உண்ணாவிரதத்தைப் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்