நகை வியாபாரியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற மார்வாடி கைது
வெள்ளி, 24 ஜூலை 2009 (16:18 IST)
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த நகை வியாபாரி சுரேஷ்குமாரை துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் மார்வாடி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). நகை வியாபாரியான இவரது உடல் பாகங்களை கடந்த மாதம் 7ஆம் தேதி மூன்று இடங்களில் காவல்துறையினர் கைப்பற்றினர். எனினும் சுரேஷ்குமாரின் தலை மட்டும் கிடைக்காமல் இருந்து வந்தது.
WD
இந்த கொலை குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கேரளாவை சேர்ந்த நகை வியாபாரி சுனில்குமார் என்பவரின் உதவியாளர் கோபி என்பவர், உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு முந்தைய நாளான 6ஆம் தேதி சுரேஷ்குமாரை சந்தித்து, 2 கிலோ 180 கிராம் தங்க நகைகளை விற்பதற்காக கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கேரள நகை வியாபாரி சுனில் குமார், கோபி ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், கோபியிடம் 5 கிலோ நகைகளை சுனில்குமார் விற்பதற்கு கொடுத்து அனுப்பியதாகவும், அதில் சுமார் 3 கிலோ நகைகளை வேறொரு வியாபாரி மூலம் விற்ற கோபி மீதி நகைகளை சுரேஷ்குமாரிடம் கொடுத்ததாகவும் தெரிய வந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் பாரிமுனை பகுதியில் ஒரு மண்டை ஓட்டை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்த மண்டை ஓடு இரண்டாக அறுக்கப்பட்டிருந்தது. அது சுரேஷ்குமாரின் மண்டை ஓடுதானா என்பதை கண்டுபிடிப்பதற்காக தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதற்கிடையே கடந்த மாதம் 6ஆம் தேதி சுரேஷ்குமார் யார் யாருக்கு எங்கிருந்து தனது செல்போன் மூலம் பேசியிருக்கிறார் என்ற விவரத்தை காவல்துறையினர் கண்டறிய முயன்றனர். செல்போன் கிடைக்காத நிலையில், அந்த கம்பெனியிடம் விசாரித்ததில் ஏழு கிணறு மற்றும் வால்டாக்ஸ் சாலை பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில்தான் சுரேஷ்குமார் கடைசியாக பேசியது தெரிய வந்தது. இந்த பகுதியில் உள்ள 200 வீடுகளில் நகை வியாபாரிகள் எத்தனை பேர் என காவல்துறையினர் கணக்கெடுத்தனர். அதில் 7 பேர் நகை வியாபாரிகள் என்பது தெரிய வந்தது.
இவர்களை ரகசியமாக கண்காணித்ததில் நேமிசந்த் சவுத்ரி (43) என்பவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவர் முதலில் தனக்கும், கொலைக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை கண்காணித்ததில் குற்றவாளி அவர்தான் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சவுகார்பேட்டை பெருமாள் தோட்டம் பகுதியில் உள்ள நேமிசந்த் சவுத்ரியின் வீட்டில் காவல்துறையினர் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். அதில் கேரள நகை வியாபாரியிடமிருந்து விற்பனைக்கு வந்த 2 கிலோ 180 கிராம் தங்க நகை அவருடைய வீட்டில் சிக்கியது. மேலும் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேமிசந்திடம் நடத்திய விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், மோதிராம் சவுத்ரியின் மகன் என்பதும் தெரிய வந்தது. மேலும் தாராசந்த் என்பவரது பஜாஜ் ஜூவல்லரி என்ற நகைக் கடையில் நகை வியாபாரியாக பணியாற்றி வந்த தகவலும் வெளியானது. நேமிசந்திடம் சுரேஷ்குமார் நகைகளை விற்க அவரது வீட்டுக்கு சென்றபோது, நகை விலை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனால் கோபமடைந்த நேமிசந்த், இரும்பு தடியால் சுரேஷ்குமாரின் தலையில் ஓங்கி அடித்ததாகவும் கூறப்படுகிறது.
தலையில் அடிபட்டதால் மயங்கி விழுந்த சுரேஷ்குமாரை தனது வீட்டிலேயே போட்டு விட்டு நேமிசந்த் கடைக்கு போய் விட்டதாகவும், இரவில் திரும்பி வந்து பார்த்தபோது சுரேஷ்குமார் இறந்து கிடந்ததையும் நேமிசந்த் பார்த்துள்ளார். இதையடுத்து இரவில் அனைவரும் தூங்கிய பின்பு ரம்பத்தை எடுத்து சுரேஷ்குமாரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, தனது இரு சக்கர வாகனத்தில் மூன்று பகுதியாக எடுத்துச் சென்று மூன்று இடங்களில் போட்டு விட்டு வந்ததாக விசாரணையில் நேமிசந்த் கூறியதாக தெரிகிறது. சுரேஷ்குமாரின் தலையை மகாகவி பாரதியார் நகர் காவல்நிலையத்துக்கு பின்புறம் உள்ள புதரில் வீசியதாகவும் காவல்துறையினரிடம் நேமிசந்த் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மகாகவி பாரதியார் நகர் காவல்நிலையத்துக்கு பின்புறம் உள்ள புதரில் தலையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலை நடந்து 48 நாட்கள் ஆகி விட்டதால் தலையை விலங்குகள் தூக்கி சென்று விட்டு வேறு வேறு எங்கேயாவது கிடக்கலாம் என்று கருதியும் காவல்துறையினர் தீவிர தேடி வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேமிசந்த்தின் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி உள்ள காவல்துறையினர், யாருடைய துணையுமின்றி தனி மனிதராக சுரேஷ்குமாரின் உடலை வெட்டியிருக்க முடியாது. இதனால் அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.