தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சித்திரை முதல் நாளாம் இந்த தமிழ்ப்புத்தாண்டில் உலகமெல்லாம் உள்ள தமிழ் மக்கள் விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் அனைத்து நலன்களும் தமிழ் மக்களுக்கு கிடைத்திடவும், இலங்கை வாழ்த்தமிழர்களுக்கு இன்னல் தீர்ந்து வருங்காலம் இனிதாக அமைந்திடவும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விலைவாசி உயர்ந்து வரும் இந்த நாளில் புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஆசை இருந்தாலும், ஏழைகளுக்கு கொண்டாடும் நிலைமை இல்லை. இருந்தாலும் விடுமுறை கிடைத்ததாலும், ஓய்வு கிடைத்ததாலும் நிம்மதிதானே. அந்த வகையிலாவது எல்லா மக்களும் இந்த தமிழ்ப்புத்தாண்டை இனிதே கொண்டாட வாழ்த்துகிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
WD
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு தை திங்கள் முதல் நாள்தான் என்பதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உள்ளன. அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு.
சித்திரை முழுநிலவு நாளில்தான் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் தீமைகள் அகன்று, உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்த சித்திரை திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
WD
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்தில், தமிழ்ப்புத்தாண்டு தினத்தை உழவர் பெருவிழா நாளாகக் கொண்டாடி, விவசாயப் பெருமக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி தமிழகத்தில் இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு வித்திட்டிருப்பதும் இன்றைய தமிழ்ப்புத்தாண்டில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகம், வேளாண்மைத்துறை மட்டுமல்லாது, கல்வி, தொழில், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வியத்தகு வளர்ச்சி பெற்று, தமிழக மக்கள் மகிழ்வோடும், சிறப்போடும் வாழ் வாங்கு வாழ வேண்டும் என இவ்வினிய தமிழ்ப் புத்தாண்டு நன்னாளில் தமிழக மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களை என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
WD
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக அரசு தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு பல்வேறு சிறப்பு விருதுகளை அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று முதல்வர் ஜெயலலிதா அந்த விருதுகளை அறிஞர் பெருமக்களுக்கு வழங்குகிறார். இத்தகவல் தமிழர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாகும்.
புத்தாண்டு, இலங்கை தமிழர்களின் வாழ்வில் இன்னல்களை நிரந்தரமாய் தீர்த்து, அவர்கள் வாழ்வில் நம்மதியும், குறைவிலா இன்பமும் கிடைத்திட வாழ்த்துகின்றேன். இவ்வாறு ஈடுயினையற்ற திருநாளான தமிழ்த்திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை உலககெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு, புதிய நீதிக்கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.