தமிழ்நாட்டில் 85% வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும்: தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்
திங்கள், 7 செப்டம்பர் 2009 (13:01 IST)
தமிழகத்தில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் 85 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்திலும் 1956 மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு முன்பிருந்து தமிழகத்தைத் தங்கள் தாயகமாகக் கொண்டு வசிப்பவர்களின் வாரிசுகளுக்கு 85 விழுக்காடு வேலை வாய்ப்பு ஒதுக்க வேண்டும்.
‘மண்ணின் மக்களுக்கே வேலை’ என்ற முழக்கத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பல ஆண்டுகளாக எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்கோரிக்கையை ஓர் அளவில் ஏற்கும் வகையில் இந்திய அரசின் ஊழியர் தேர்வு ஆணையத் தலைவர் என்.கே.இரவி அண்மையில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் அண்மைக் காலமாக மிகமிகக் குறைவாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள் என்ற உண்மையை இரவி தமது உரை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக வடநாட்டைச் சேர்ந்த இந்திக்காரர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் போன்ற மற்ற அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களே தமிழ்நாட்டில் செயல்படும் வருமானவரி அலுவலகங்கள், உற்பத்தி வரி அலுவலகங்கள், தொடர் வண்டித்துறை, பி.எச்.சி.எல். நிறுவனம் போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த அநீதியைக் கண்டித்தும் தமிழர்களுக்கு 85 விழுக்காடு வேலைக்கு இந்நிறுவனங்களில் ஒதுக்கீடு கோரியும் கடந்த 2008 மே 20ஆம் தேதி திருச்சி பி.எச்.இ.எல். ஆலைமுன் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இப்பொழுது இந்திய அரசின் ஊழியர் தேர்வாணையத் தலைவரே உரிய விகிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் உள்ளூர் மக்கள் வேலையில் இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளது, நிலைமை மோசம் அடைந்துள்ளதை உணர்த்துகிறது.
தேர்வாணையத் தலைவர் 50 முதல் 75 விழுக்காடு வரை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்பை ஒதுக்கீடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
மண்ணின் மக்களுக்குக் குறைந்தது 85 விழுக்காடாவது வேலைவாய்ப்பை ஒதுக்கீடு செய்வது தான் நீதியாகும். அவ்வாறு ஆணையிடுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஊழியர் தேர்வாணயத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என்று மணியரசன் கூறியுள்ளார்.