ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 4வது நாளை எட்டியுள்ள நிலையில், தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
துறைமுக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், மீனவ சங்க தலைவர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 10 மீனவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைபட்டிருக்கும் 5 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இறால், நண்டு, கணவாய் மீன்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தால், லேத் பட்டறைகள், படகு உதிரி பாக கடைகள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளை வரும் 10ம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அழைத்துள்ளார்.