திருமா விழுப்புரம் செல்ல 3 நாட்களுக்கு அனுமதி

வியாழன், 30 மே 2013 (17:11 IST)
FILE
மரக்காணம் கலவரம் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது தொகுதியான சிதம்பரத்திற்கு மரக்காணம் வழியாக செல்வதற்காக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், 3 நாட்களுக்கு அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விழுப்புரம் மாவட்டத்துக்குள் நுழைய மாவட்ட கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் திருமாவளவன் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தொகுதி மேம்பாட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா இன்று மாலை நடக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து திருமாவளவன் சார்பில் இடைக்கால மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், சிதம்பரம் தொகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் மரக்காணம் அல்லது திண்டிவனம் வழியாக தான் செல்ல வேண்டும். எனவே சிதம்பரம் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சிதம்பரம் கூட்டத்துக்கு தொல்.திருமாவளவனுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவர் விழுப்புரம் மாவட்டம் வழியாக அங்கு செல்லலாம். ஆனால் கூட்டத்துக்கு போகும் வரை எந்த ஒரு இடத்திலும் அவர் காரை விட்டு கீழே இறங்க கூடாது. சிதம்பரத்தில் கூட்டம் நடைபெறும் இடத்தில் திருமாவளவனுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்