திருமணமா? காதலியைக் கொன்று தலையைத் துண்டித்த காதலன் கைது!

செவ்வாய், 24 டிசம்பர் 2013 (15:10 IST)
FILE
திருச்சி தென்னூர் அருகே தண்ணீர் குட்டையில் கடந்த 18ஆம் தேதி இளம்பெண் ஒருவரின் உடல் தலையில்லாமல் கிடந்தது.

போலீஸுக்குத் தகவல் போக அவர்கள் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அண்டைப்பகுதிகள்ல் இளம் பெண் யாராவது இந்த ஒருவார காலத்தில் மாயமானார்களா என்று தகவல் திரட்டினர்.

இந்த விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சசிலகா என்ற 28 வயது பெண் ஒருவர் திருச்சி மிளகுப்பாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருவதாகக்கூறி கிளம்பியவர் பின்னர் திரும்பவில்லை என்ற தகவல் கிடைத்தது.

பின்னர் கொல்லப்பட்ட சசிகலாவின் செல்பேசி எண்களை ஆராய்ச்சி செய்தனர் போலீசார். அதில் கடைசியாக ரெங்கநாதம் என்பவருடன் சசிகலா பேசியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ரெங்கநாதனை நைச்சியமாக பிடித்தது போலீஸ்.

கைது செய்யப்பட்ட ரெங்கநாதன் போலீசிடம் கூறியதாவது:

சசிகலா பெரியமிளகு பாறையில் உள்ள அவரது உறவினரான சத்யா வீட்டுக்கு வந்து செல்வார். ஏற்கனவே சத்யாவை எனக்கு தெரியும் என்பதால் நான் சசிகலாவுடன் சகஜமாக பழகி வந்தேன். நாளடைவில் சசிகலாவும், நானும் காதலித்தோம். கடந்த 3 ஆண்டுகளாக இந்த காதல் தொடர்ந்தது. இந்த நிலையில் எனக்கு பணம் தேவைப்பட்டதால் சசிகலா அவரது 4 பவுன் நகையையும் எனக்கு தந்து உதவினார்.

இதை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தி வந்தார். இதற்கு தனது பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. மேலும் தனது நகையையும் கேட்டு தொந்தரவு செய்தார்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த நான், எனது நண்பரான இதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் சத்யா உதவியுடன் சசிகலாவை வெளியூருக்கு சுற்றுப்பயணம் செல்லலாம் என்று அழைத்தேன். அதை நம்பிய அவரும் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார்.

பின்னர் பகல் முழுவதும் வெளியில் சுற்றிய நாங்கள் இரவில் தென்னூர் வாமடம் பகுதிக்கு 4 பேரும் வந்தோம். பின்னர் சத்யாவை அவரது வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்து விட்டேன். சசிகலாவை கொலை செய்தால் தான் நிம்மதியாக வாழமுடியும் என்று நினைத்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்து அந்த பகுதியில் உள்ள பாழடைந்த பங்களாவுக்கு அழைத்து சென்றேன். என்னுடன் சுரேசும் வந்தார்.

பின்னர் சசிகலாவை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். அவரது உடலை அந்த பகுதியில் உள்ள தண்ணீர் குட்டையில் வீசிவிட்டு சென்று விட்டோம். ஆனாலும் போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளது சசிகலா தான் என்று கண்டு பிடித்து விட்டால் எங்களை கைது செய்து விடுவார்களோ? என்று பயந்து 2 நாட்கள் கழித்து 16-ந்தேதி தலையை மட்டும் வெட்டி எடுத்து விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்றோம். தலையை உய்யக்கொண்டான் ஆற்றில் விசினால் தப்பித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனாலும் தீவிர விசாரணை நடத்தி போலீசார் எங்களை கைது செய்து விட்டனர் என்று அவர் கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து போலீசார் ரெங்கநாதன், சுரேஷ், சத்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்படுகிறார்கள்.

ஆனால் இந்த வழக்கில் முக்கிய தடயமான சசிகலாவின் தலை இது வரை போலீசாரிடம் கிடைக்காததால் ரெங்கநாதன் தலையை வீசி சென்றதாக கூறிய உய்யக்கொண்டான் ஆற்றுப் பகுதியில் தண்ணீர் ஓடும் திசை நோக்கி இன்றும் சல்லடை போட்டு போலீசார் தலையை தேடி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்