திம்பம் மலைப்பகுதியில் தொடரும் மூடுபனி: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வெள்ளி, 4 டிசம்பர் 2009 (16:22 IST)
webdunia photo
WD
திம்பம் மலைப்பகுதியில் தொடர்ந்து மூடுபனி நிலவி வருவதால் இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட பகுதியாகும். இதை குட்டி கொடைக்கானல் என்று அழைப்பார்கள். காரணம் சுற்றிலும் வனப்பகுதியால் சூழ்ந்துள்ள திம்பம் மலைப்பகுதியில் வானுயர்ந்து காணப்படும் மலைகளை உரசியவாரே மேகக்கூட்டங்கள் அலை, அலையாய் நகர்ந்து கொண்டிருக்கும்.
இந்த வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 209ல் பண்ணாரியில் இருந்து திம்பம் கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் செல்லும்போது மூடுபனியால் வழி தெரியாமல் ஒருவித குளிர்ந்த ஈரப்பதம் கொண்ட காற்றுடன் பயணம் செய்யும்போது அந்த சுகத்தை அனுபவிக்காத பயணிகள் இருக்கமுடியாது என்றே சொல்லாம்.
கடந்த இரண்டு வருடங்களாக இப்பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதன் காரணமாக திம்பம் மலைப்பகுதி அதன் தன்மையே இல்லாமல் வெப்பத்தோடு காணப்பட்டது.
தற்போது இப்பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாய் காணப்படுகிறது. இதனால் தற்போது தொடர்ந்து இங்கு மூடுபனி காணப்படுகிறது.
ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் தற்போது திம்பம் மலைப்பகுதிக்கு வரத்தொடங்கியுள்ளனர்.