திக்கு தெரியாத காட்டில் திரிந்துகொண்டிருக்கிறார் ராமதாஸ்: சரத்குமார் தாக்கு
புதன், 4 நவம்பர் 2009 (10:23 IST)
நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்று கூறும் ராமதாஸ், கலை உலகைச் சேர்ந்த கருணாநிதி, ஜெயலலிதாவுடன் ஏன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தற்போது ராமதாஸ் திக்கு தெரியாத காட்டில் திரிந்துகொண்டிருக்கிறார் என்று குற்றம் சாற்றியுள்ளார்.
WD
சேலத்தில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 12ஆம் தேதி கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், கூட்டணி வைத்து சந்திப்பதா? யாருடைய ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து கருத்துக் கேட்கப்படும். அதன்பிறகு 3 நாட்கள் அந்த கருத்துக்களை பரிசீலித்து, தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்பேன்.
நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். அவர் கலை உலகைச் சேர்ந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். நமது முதலமைச்சர் கருணாநிதியும் கலை உலகைச் சேர்ந்தவர். தற்போது அவர் திக்கு தெரியாத காட்டில் திரிந்துகொண்டிருக்கிறார். அவரைப்பற்றி நான் அதிகமாக குறைகூற கூடாது. அப்படிக் குறைகூறுபவன் அல்ல நான். ஆனால் எதிர்காலத்தில் அடிக்கடி கூட்டணி மாறுபவர்களுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்துக்கொள்ளாது.
இலங்கையில் முள்கம்பிகளுக்கு மத்தியில் அகதிகளாக அடைபட்டு உள்ள இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்காக தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி அவர்களின் துயர் துடைக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை எம்.பி.க்கள் குழு பார்த்து வந்துள்ளது. அந்த குழுவில் தமிழ் ஆர்வம் கொண்ட எம்.பி.க்களும் சென்று வந்துள்ளனர். ஒரு பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் நானும் விரைவில் இலங்கை செல்ல இருக்கிறேன். அதற்காக அங்குள்ள எங்கள் பத்திரிகையை சேர்ந்தவர்கள் இலங்கை அரசை அணுகி இருக்கிறார்கள் என்று சரத்குமார் கூறினார்.