தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்

செவ்வாய், 25 மார்ச் 2014 (17:58 IST)
FILE
தஞ்சாவூர் அருகே திங்கள்கிழமை இரவு தம்பியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணன் உள்பட இருவரை காவல்துறை தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகேயுள்ள வாளமர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தோழப்பனுக்கு 3 மகன்கள். இவர்களில் முதல் இரு மகன்களான வீரரத்தினகுமார், முருகானந்தம் ஆகியோருக்குத் திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகனான குமாருக்கு (35) திருமணமாகவில்லை. தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு வீரரத்தினகுமார், முருகானந்தத்திடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், குமாருக்கும், முருகானந்தத்துக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோவனின் வீட்டுத் திண்ணையில் திங்கள்கிழமை நள்ளிரவு குமார் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, குமாரை முருகானந்தம் உள்பட இருவர் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்தக் காயமடைந்த குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு குமார் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். இதுதொடர்பாக முருகானந்தம் உள்பட இருவரை தஞ்சாவூர் தாலுகா காவல்துறை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்