தமிழக மீனவர்கள் பிடித்த மீன்களையும், செல்பேசிகளையும் சிறிலங்க கடற்படை பறித்தது

சனி, 4 செப்டம்பர் 2010 (13:33 IST)
கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர் அச்சுறுத்தி துரத்தியதுமல்லாமல், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், அவர்களின் செல்பேசிகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.

சிறிலங்க கடற்படையினரால் இக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 22 இராமேஸ்வரம் மீனவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இத்தகவலை தமிழக அரசின் மீ்ன் வளத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை 50 படகுகளில் சென்ற 300 மீனவர்கள் கச்சத் தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தியுள்ளதாகவும், 5 படகுளில் இறங்கி அதிலிருந்த மீன்களையும், மீனவர்கள் வைத்திருந்த செல்பேசிகளையும் பறித்து சென்றுள்ளதாகவும் கூறிய நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் அலெக்ஸ், தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் தாக்குவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட தாக்குதல்கள் நிகழா வண்ணம் மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அலெக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்