தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை

புதன், 2 நவம்பர் 2011 (10:43 IST)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை-தமிழகம் இடையே உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்கிறது.

மழையின் காரணமாக காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நேற்று காலையில் இருந்தே சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இரவில் கனமழை பெய்தது.இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம், போரூர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகம் வருகிறது.

பூண்டி ஏரி பகுதியில் 19.4 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் 131 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது. புழல் ஏரியில் 36 மி.மீ. மழை பெய்தது. அங்கு 349 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 41 மி.மீ. மழை பெய்துள்ளதால் 544 கனஅடி தண்ணீர் வருகிறது.

சோழவரம் ஏரி பகுதியில் 21 மி.மீ. மழை பெய்துள்ளதால் 104 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது. வீராணம் ஏரி பகுதியில் 35 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இதனால் குடிநீர் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இன்று காலையிலும் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தபோது:

இலங்கை முதல் தமிழகத்தையொட்டி உள்ள வங்கக் கடல் வரை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மத்திய மேற்கு வங்க கடல் வரை நீடித்ததால் கடந்த 2 நாட்களாக மழை நீடித்தது. பருவமழை தீவிரம் அடைந்துள் நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடைந்துள்ளது.

இதனால் கடலோர மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம்.சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யும், என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்