தமிழக இலங்கை அகதிகள் வசதிக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு: கருணாநிதி அறிவிப்பு
திங்கள், 2 நவம்பர் 2009 (15:59 IST)
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் தமிழக அரசின் சார்பில் உடனடியாக செலவிடுவது என்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி, இலங்கைத் தமிழ் அகதிகள் மிகுந்த அவதியுறுவதாக வந்த செய்தி குறித்து விவரங்களைக் கோரினார். அவர்களும் தமிழர்கள் என்பதை மறவாமலும், அவர்களை அகதிகள் என்ற நோக்கத்தோடு பார்க்கக்கூடாது என்றும் கூறி, இந்தப் பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் இன்னல்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தி.மு.க. அரசு காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு சலுகைகளை பற்றிய விவரங்களைக் கேட்ட பின்னர் தொடர்ந்து அவர்களுக்கு எந்த விதத்தில் உதவி அளிக்க வேண்டும் என்பதைப் பற்றி அறிந்திட தமிழகத்திலே உள்ள 115 முகாம்களுக்கும் உடனடியாக அமைச்சர்கள் சென்று நேரிலே நிலைமைகளை அறிந்து நவம்பர் 10ஆம் தேதிக்குள் முதலமைச்சருக்கு அறிக்கையினை அளிக்க வேண்டும் என்றும், அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு தி.மு.க அரசு ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்ற பிறகு முதலமைச்சர், அமைச்சர்களை எல்லாம் இது போல முகாம்களைப் பார்வையிட அறிவுறுத்தியதின் பேரில் அவர்களும் அவ்வாறு சென்று அளித்த அறிக்கையினையொட்டி, முகாம்களில் உள்ள வீடுகளுக்கு மறு சீரமைப்பு செய்திடவும், அடிப்படை வசதிகளைச் செய்து தரவும், சுமார் ரூ.16 கோடிக்காக முன் மொழிவுகள் தயாரிக்கப்பட்டு, அது மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலனையிலே உள்ளது.
மத்திய அரசிடமிருந்து அதற்கு ஒப்புதல் இன்னமும் வராத நிலையில் 2009-2010ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர்கள் முகாம்களைப் பார்வையிட்டு நவம்பர் 10ஆம்தேதிக்குள் அறிக்கை அளித்த பின், அதன் அடிப்படையில் மேலும் இந்த முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவிடும் வகையில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் தமிழக அரசின் சார்பில் உடனடியாக செலவிடுவது என்றும், அந்த தொகையை எவ்வாறு செலவழிப்பது என்பது பற்றி நவம்பர் 10ஆம் தேதிக்கு பிறகு அமைச்சர்களின் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகளை எடுப்பது என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.