தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

வெள்ளி, 31 ஜனவரி 2014 (20:04 IST)
தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாராளுமன்ற மேல் சபைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
FILE

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதையடுத்து மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளே திமுக வேட்பாளர் திருச்சி சிவா வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் அதிமுக சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் மற்றும் 2 சுயேட்சை வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெறுவதற்கான நேரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது. எனவே, களத்தில் இருந்த 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் இன்று முறைப்படி அறிவித்தார். இந்த எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்