ஆறுகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு இந்த ஆண்டு தமிழக அரசு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது மார்க்சிஸ்ட் உறுப்பினர் டெல்லி பாபு, காங்கிரஸ் உறுப்பினர் இ.எஸ்.எஸ்.ராமன், தி.மு.க உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ஆறுகள், ஓடைகளின் குறுக்கே சிறு சிறு தடுப்பணைகள், குட்டைகள், கசிவு நீர் குட்டைகள் ஆகியவற்றை நிலத்தடி செறிவு நீர் திட்டத்தின் கீழ் அமைப்பதற்கு முதலமைச்சர் கருணாநிதி முடிவு செய்து கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில் 103 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 88 பணிகள் முடிக்கப்பட்டன. இந்த ஆண்டு இதற்காக 200 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாயும், வேளாண்துறை, வனத்துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு 100 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் இதுபோன்ற சிறு சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தெரிவித்தால் தேவையின் அடிப்படையில் அந்தப் பணிகள் எடுத்துக்கொள்ளப்படும். தடுப்பணை பற்றி கேட்காமல் பாலாற்றில் மணல் அள்ளுவதால் நீர் ஆதாரம் குறைந்துவிட்டதாக பா.ம.க உறுப்பினர் குற்றம்சாற்றுகிறார். இரு மாநிலங்களுக்கு இடையே அணை கட்டுவதில் சில விதிமுறைகள் உள்ளன. பாலாறும் அதில் சேர்ந்துள்ளது. மேலே இருக்கும் இடத்தில் அணை கட்டும்போது கீழ்ப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், எந்த மாநிலமும் அப்படி செய்யவில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். இதே பிரச்சனைதான் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் உள்ளது.
இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நமக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரள அரசு மீண்டும் மீண்டும் கோரினார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் ஒரே உத்தரவைத்தான் பிறப்பித்தது. அந்த உத்தரவை கேரள அரசு அமல்படுத்தவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க மாநில அரசுகள் ஒத்துவர வேண்டும். ஆனால் அவர்கள் ஒத்துவரவில்லை. ஏதாவது ஒரு பிரச்சனை வந்தபிறகே பாலாறு பிரச்னை தீரும் என்று துரைமுருகன் கூறினார்.