ஜாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் ‘இஸ்லாம்’ என்று பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சரியான நீதி கிடைக்க இந்த கணக்கெடுப்பு பெரிதும் உதவிடும்.
எனவே ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மிகவும் கவனத்துடன் இந்த கணக்கெடுப்பில் பங்கு கொள்ளவேண்டும். சில மாவட்டங்களில் கணக்கெடுப்பாளர்கள் பட்டியலில் உள்ள 24 கேள்விகளுக்கும் விடைகளை கேட்காமல் வெறும் பெயர் மற்றும் முகவரியை மட்டும் பதிந்துவிட்டுச் செல்வதாக வரும் புகார் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகம் மாநில அளவிலும் மத்திய அளவிலும் இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்க வேண்டும் என்று போராடி வரும் இச்சூழலில் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை பெரும் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் அணுக வேண்டும். முஸ்லிம்களை பொறுத்த வரையில் மதம் என்ற கேள்விக்கு இஸ்லாம் என்று குறிப்பிடுவதே சரியானது. முஸ்லிம் என்று பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.
இஸ்லாத்தில் ஜாதிய பிரிவுகள் இல்லையென்றாலும் முஸ்லிம்களின் பல்வேறு பிரிவினரின் சமூக நிலையை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் லெப்பை, (தமிழ்-உருது பேசக்கூடிய ராவுத்தர், மரைக்காயர் உள்பட) தக்னி, தூதே குலா, மாப்பிள்ளா, அன்சர், ஷேக், சையத் என ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில், முதல் நான்கும் தேசிய அளவில் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எனவே, தமிழகத்தில் கணக்கெடுப்பாளர்களிடம் சாதி என்ற கேள்விக்கு லெப்பை, தக்னி, தூதேகுலா, மாப்பிள்ளா ஆகிய நான்கில் ஒன்றை இடம்பெறச் செய்தால் மட்டுமே மத்திய-மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டுச் சலுகையை பெறமுடியும்.
ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோர் லெப்பை என்ற பிரிவின் கீழ் வருவதால் லெப்பை என்றே குறிப்பிடவும். குடும்ப வருமானம் என்பது மிக முக்கியமானதாகும். மாத வருமானத்தைக் கொண்டு ஆண்டு வருமானம் கணிக்கப்படும். எனவே மாதத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் குறையாமலும், ஆண்டிற்கு 24 ஆயிரம் ரூபாய் குறையாமலும் குறிப்பிட வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் கண்காணிப்புடன் செயல்பட்டு எந்தவொரு முஸ்லிம் பெயரும் விடுபடாமல் பதிவு செய்வதில் முழுக்கவனம் செலுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாத கடமையாகும் என்று வாஹிருல்லா கூறியுள்ளார்.