சேலம் இரும்பாலைக்கு நிலம் கொடுத்த வாரிசுதாரர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
புதன், 28 ஏப்ரல் 2010 (15:41 IST)
சேலம் இரும்பாலை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை கிடைத்திடவும், அவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும் மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று துணை முதமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று சேலம் இருப்பாலை விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், விடுதலைச்சிறுத்தைகள் உறுப்பினர் ரவிக்குமார், அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, முதலமைச்சர் கருணாநிதியும், துணை முதலமைச்சர் ஸ்டாலினும் மத்திய அரசுடனும், இரும்பாலை நிர்வாகத்துடனும் பேசி இரும்பாலை உருவாவதற்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய வேலைவாய்ப்பும், நிவாரணமும் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இன்றைக்கு அங்கு நிலங்கள் அதிக விலைக்கு போகின்றன. ஆனால் இரும்பாலை நிர்வாகத்திற்காக அன்றைக்கு ஏக்கர் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை அந்த மக்கள் விற்று விட்டனர். அவர்களுடைய நிலை கருதி உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
இரும்பாலை நிர்வாகத்தை கவனிக்கும் இந்திய ஸ்டீல் ஆணையம் என்ற மத்திய அரசின் நிறுவனம், மற்ற மாநிலங்களில் நிலம் அளித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை சுட்டிக்காட்டி பேசிய உறுப்பினர்கள், இதே நடைமுறையை சேலத்திலும் அந்த நிறுவனம் பின்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் இரும்பாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசிய உறுப்பினர்கள் தங்கள் உணர்வுகளை எடுத்துச் சொன்னார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென்ற உறுப்பினர்களின் உணர்வுதான் முதலமைச்சருக்கும் இந்த அரசுக்கும் உள்ளது.
இந்த பிரச்சனை தொடர்பாக இன்று இங்கு விவாதம் நடக்கும் என்பதை அறிந்ததும் சேலம் ஆட்சியரை தொடர்பு கொண்டு அரசு சார்பில் சில விவரங்களை சேகரித்தோம். சேலம் இரும்பாலை தொடங்குவதற்கு 1970 ஆம் ஆண்டு சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் நிலங்களை வழங்கியிருக்கிறார்கள். அப்படி வழங்கியவர்களில் 203 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு அவரவர் தகுதிக்கேற்ப வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வேலை கிடைக்காதவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போது நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் நிலம் கொடுத்து வேலை கிடைக்காதவர்களின் பிரச்சனைக்கு உரிய முடிவு மேற்கொள்ள நாளை சேலம் ஆட்சியரும், இரும்பாலை நிர்வாகத்தினரும் கலந்தாலோசனை நடத்த உள்ளனர். இதன் மையப் பொருளாக மீண்டும் இதற்கென ஒரு தனி வேலைவாய்ப்பகம் உருவாக்கப்பட்டு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்த உள்ளது.
இந்த கூட்டத்தின் முடிவை அடுத்து வேலை கிடைக்காதவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதற்கு முதலமைச்சரின் ஆணையை ஏற்று மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கை களையும்மேற்கொள்ளும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.