சேலம் கோரிமேடு செல்லும் வழியில் தனியார் சட்டக்கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த விக்னேஸ்வரராஜ் என்ற மாணவர் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சதீஸ் 2ஆம் வருடம் படித்து வருகிறார்.
நேற்றிரவு இவர்கள் அருகில் உள்ள டீ கடைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 3ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர் கரூரை சேர்ந்த பிரபாகரனும் வந்துள்ளார். அப்போது இவர்கள் மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வாய்தகராறில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த மேலும் சில சட்டக்கல்லூரி மாணவர்களும் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் விக்னேஸ்வராஜ், சதீஸ், பிரபாகரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சேலம் கன்னங்குறிச்சி காவல்துறையினர் மாணவர்கள் மீது கூட்டமாக கூடி தாக்குதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். இந்த நிகழ்வால் சேலம் தனியார் சட்டக்கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.