சென்னை விமானநிலையத்தில் 2வது முறையாக கடத்தல் முயற்சி

ஞாயிறு, 19 பிப்ரவரி 2012 (16:30 IST)
பலத்த பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முறையாக கடத்தல் முயற்சி நடைபெற்றுள்ளது

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும், பிரசாத் என்பவரின் உதவியுடன் இந்த கடத்தல் முயற்சி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் இருந்து நேற்றிரவு 12 மணிக்கு சிங்கப்பூருக்குச் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்து 25 லட்ச ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பணத்தினை விமானத்திற்குள் எடுத்துச்செல்ல உதவிய ஏர் இந்தியா ஊழியர் பிரசாத்தும், பணத்தை கடத்த முயன்ற ஷாஜகான் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பல கோடி ரூபாய் மதிப்புடைய எபிடெமின் என்கிற போதைப்பொருள், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் உதவியுடன் கடத்தப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இரண்டாவது முறையாக, கடத்தல் முயற்சி நடந்துள்ளது, சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதை காட்டுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்