சென்னை மருத்துவமனையில் சிறைபிடிக்கப்பட்ட அயல்நாட்டு நோயாளிகள் விடுவிப்பு
சனி, 27 ஜூன் 2009 (16:23 IST)
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அயல்நாட்டினர், சிகிச்சைக்கான பணத்தை செலுத்தாததால் மருத்துவமனை நிர்வாகம் அவர்களை சிறைபிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தனியாருக்கு சொந்தமான இதய சிகிச்சை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கயானா நாட்டிலிருந்து 10 குழந்தைகள் உட்பட 2 பெரியவர்கள் கொண்ட குழு வந்துள்ளது.
அக்குழுவில் உள்ள கியரன் சிங் என்ற பெண் சிகிச்சை முடிந்த பின்னர், அதற்கான பணத்தை செலுத்தாமல் தப்பி செல்ல முயன்றதால் அறை ஒன்றில் அவரை மருத்துவமனை நிர்வாகம் அடைத்து வைத்துள்ளது. குழந்தைகள் 10 பேரும் அவசர சிகிச்சை பிரிவு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு இவர்கள் செலுத்த வேண்டிய பணம் 90 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவர்கள் சிகிச்சை முடிந்து கடந்த நேற்றிரவு நாடு திரும்புவதாக திட்டமிருந்தனர்.
கியரன் சிங், கயானாவிற்கு சென்று சிகிச்சைக்கான பணத்தை அனுப்புவதாகவும், தங்களை வெளியே விடும்படியும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதற்கு மறுத்து விட்டது. இதனால் கிரயன் சிங்கும், அவரது குழுவினரும் கண்ணாடி கதவுகள் அருகே வந்து தங்களுக்கு உதவும்படியான துண்டு சீட்டுக்களை காட்டியுள்ளனர்.
இவைகள் அனைத்தும் கிரயன் சிங் நடத்தும் நாடகம் என்றும், அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகவும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செரியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டிற்கு தகவல் அளிக்கப் போவதாகவும், இவர்களை அழைத்து வந்த தொண்டு நிறுவனம் பணம் தராமல் ஏமாற்றுவதாகவும் செரியன் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரயன் சிங், கயானா நாட்டின் முன்னாள் அதிபரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சிறைபிடிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் விடுவித்துள்ளது. சிகிச்சைக்கான ரூ.45 லட்சத்தை 6 மாதத்திற்குள் தருவதாக தொண்டு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதால் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.