சென்னை-நாகூர் இடையே தினமும் இயக்கப்பட்டு வரும் விரைவு இரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - நாகூர் இடையே தினமும் இயக்கப்பட்டு வரும் விரைவு இரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இரயில் (16175), மறுநாள் காலை 9.15 மணிக்கு நாகூரை சென்றடைகிறது. பின்னர், அங்கிருந்து 9.20 மணிக்கு புறப்படும் இந்த இரயில் காலை 10 மணிக்கு காரைக்காலை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், காரைக்காலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த இரயில் (16176), அன்று இரவு 8 மணிக்கு நாகூரை வந்தடையும். பின்னர், அங்கிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும் இந்த இரயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த இரயில் நீட்டிப்பு குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் - நாகூர் இடையே தினமும் இயக்கப்பட்டு வரும் விரைவு இரயிலும் காரைக்கால் வரை நீட்டிக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்படும் இந்த இரயில் (16866) மறுநாள் காலை 11.45 மணிக்கு நாகூரை வந்தடைகிறது. பின்னர், அங்கிருந்து 11.50 மணிக்கு புறப்படும் இரயில் மதியம் 12.20 மணிக்கு காரைக்காலை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், காரைக்காலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த இரயில் (16865), அன்று மாலை 4.25 மணிக்கு நாகூரை சென்றடைகிறது. பின்னர், அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த இரயில், மறுநாள் அதிகாலை 3.25 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைகிறது. இந்த இரயில் நீட்டிப்புக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று புதிய கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.