சென்னையில் 19 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

வெள்ளி, 17 ஜனவரி 2014 (17:52 IST)
சென்னையில் 2 தவணைகளில் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் 19 ஆம் தேதியும் இரண்டாவது தவணை பிப்ரவரி மாதமும் நடைபெறவுள்ளது.
FILE

முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாமில் சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 5.70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1325 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலியோ நோயை அடி யோடு ஒழிக்க வேண்டுமானால், பெற்றோர்களாகிய நீங்கள், உங்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டு மருந்து மையத்திற்குச் சென்று, குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ள வேண்டும். சொட்டுமருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவுடன் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது.

போலியோ சொட்டு மருந்து போடுவதால் எந்த வித தீங்கும் கிடையாது. ஆகவே, அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டுமருந்து ஒரே நாளில் போட்டுக் கொள்வதன் மூலம், சுற்றுச் சூழலில் இருந்து கொடிய போலியோ கிருமியை முற்றிலுமாக நீக்கி, போலியோ நோயை அறவே ஒழிக்க முடியும்.

குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறை யாக கொடுத்திருந்தாலும் இந்த முகாமில் அவசியம் சொட்டுமருந்து போட்டுக் கொள்ள வேண்டும். முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டுமருந்தும் வழக்க மான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்தும் மாற்று மருந்து அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.

சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம் காரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள், இந்த நாளில் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது அது மட்டுமின்றி, 19 ஆம் தேதி அன்று சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறா மல் சொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும். சொட்டுமருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 5300 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி செய்தி குறிப்பில் மேற்கண்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்